Saturday 29 October 2011

மழைக்காலம் தொடங்கி சிலநாட்கள் ஆகிவிட்டது………பூமி பச்சை போர்வை போர்த்திக்கொண்டது….பூமிக்கு குளிரடிக்குமா
22 வருடங்களை பின்னோக்கிப் பார்த்தால் இதுபோல் ஒரு மழையின் தொடக்க காலங்களில் குப்பைமேடுகளிலும், தெருவின் காலியிடங்களிலும் முளைத்து நிற்கும் தக்காளி, பப்பாளி மற்றும் மிளகாய் செடிகளை தேடித்திரிந்த அந்த நாட்கள் …..பசுமையாய் இனிக்கிறது…….
துலுக்கமல்லி என்ற சாமந்தி(செவ்வந்தி) செடிகளைத் தேடி மையத்தான் கோட்டைக்குள் (இடுகாடு) பயத்துடன் சுற்றித் திரிந்த அந்தநாட்கள்……
பிடுங்கி வந்த செடிகளை நட்டுவைத்து பாத்திகட்டி நாள்தோறும் காலை மாலைகளில் தண்ணீர் விட்டு மகிழ்ந்த அந்தநாட்கள்……..
கொடிவிட்ட பீர்க்கங்காய்,புடலங்காய்,பாகற்காய் செடிகள் படர்வதற்கு பந்தல் கட்டிய பவித்ரமான அந்தநாட்கள்……
நட்டுவைத்த செடிகளில் முதலில் பூப்பது, காய்ப்பது உனதா? எனதா? என பந்தயம் கட்டி முதல் பூ, காய் கண்டு பரவசம் அடைந்த அந்தநாட்கள்………..
பப்பாளி செடிவளர்ந்து மரமாகி அதிலிருந்து முதல் பழம் ருசித்த அந்தநாட்கள்……..
பப்பாளியின் செங்காய் பறித்து தோல்சீவி சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி சிறிது புளிக்கரைசல் தயார்செய்து அவற்றுடன் சுட்ட காய்ந்த குண்டுமிளகாயை பிசைந்து அதில் பப்பாளித்துண்டுகளை இட்டு சிறிதுநேரம் ஊறவைத்து பின் சாப்பிட்ட சுவைமிகுந்த அந்த நாட்கள்……….
இப்பொழுது அந்த இடத்தில் அழகிய வீடு இருக்கிறது….அதைக்காணும் போதெல்லாம் …….அதிலிருந்த பப்பாளிமரம்.,சீமைஒடை, மாதுளை, முருங்கை, மருதாணி,யூகலிப்டஸ், செம்பருத்தி, குரோட்டன்ஸ்,நித்தியகல்யாணி,தக்காளி, மிளகாய்,கறிவேப்பிலை,பீன்ஸ்,பீர்க்கை, பாகற்காய்,புடலங்காய்,பசலைக்கீரை அதில் விளைந்த பழங்களும் காய்களும் அதை உண்ணவந்த பறவைகளும், உறங்கவந்த குருவிகளும்,அதில் மலர்ந்த மலர்களும் மலரில் தேன் உண்ணவந்த வண்டுகளும், வண்ணத்துப்பூச்சிகளும்,அந்த இடத்தில் வளர்ந்த ஆடுகள், கோழிகள்,எலிகள் ,கீரிப்பிள்ளைகள் மற்றும் நீரிறைத்து குளித்து நீர்பாய்ச்சிய அந்த பெரிய கிணறு அனைத்தும் கண்முன் காட்சியாய் விரிகிறது. நிகழ்கால நிஜம் அவற்றுக்கு திரையிடுகிறது.
இவற்றையெல்லாம் மூடி சமாதிபோல் சிமெண்ட் தளமிட்டு ,வீடுகட்டி அதனுள் குடும்பம் வளர்க்கிறோம் இப்பொழுது.
அதன் மொட்டைமாடியில் செடிவளர்க்கமுடிவு செய்து மண்ணை தேடுகிறேன்
அதிர்கிறது மனம் மண்ணைக் காணமுடியவில்லை.தெருவெங்கும் மண்ணை மூடி சமாதிபோல் கான்கிரீட் சாலை.
மண் எடுக்க ஊருக்கு வெளியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளேன்.இப்பொழுது புரிகிறது நாம் இயற்கையைவிட்டு நீண்டதூரம் எதிர்த்திசையில் பயணித்துவிட்டோம் என்று. திரும்பிப்பார்க்கிறேன் நல்லவேளை கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் இயற்கை.
 நான் திரும்பிப்போகிறேன் இயற்கையை நோக்கி ………….
திரும்ப இயலா தொலைவுக்கு போகும்முன்
நீங்களும் திரும்பி வாருங்கள் இயற்கையை நோக்கி………… 

Thursday 29 September 2011

விளையாடிய பொழுதுகள் ........

அத்தியாயம்-2 
காச்சிட்டான் கள்ளச்சிட்டான் கள்ளன் வாரான் ஓடிப்போ....ஓடிப்போ......

கை வீசி உனை சிறை பிடித்த கணம் .....

உலகையே வென்றது போல் கூத்தாடியது கபடமில்லா மனம் அந்தநாட்களில்.........

நீள நூல்கொண்டு ,உன் வாலில் கட்டி உயரப்
பறக்கவிட்டு உனை பின்தொடர்ந்தோடிய அந்தநாட்களில்......

மழைக்கு பிந்தியநாட்களில் உன் வருகை....உயரப் பறந்து திரியும் உனை
அடித்து வீழ்த்திட கையில் விளக்குமாத்து குச்சிகளுடன் காத்திருந்த
அந்தநாட்களில்........

ஈ பிடித்து உனக்கு உணவாக ஊட்டிய அந்தநாட்களில்.......

உன் தலை சுண்டி உனது ஆயுளை அறிந்த அந்தநாட்களில்......

இரவில் அடைக்கலமாய் வீட்டிற்குள் வந்த உனை பிடித்து, உம்மாவிடம்
அடிவாங்கிய அந்தநாட்களில்.......

உன் சிறகொடித்து உனை எறும்பு புற்றுக்குள் போட்டு ரசித்த அந்தநாட்களில்.......

ஊசித்தும்பியை பாசித்தும்பிக்கு பசியாறக் கொடுத்த அந்தநாட்களில்.......

கையில் இருந்து கீழே விழுந்த உனை, கோழிகள் ஓடிவந்து கொத்தித்தின்ற
அந்தநாட்களில்.......

மதில் சுவர்களிலும்,செடிகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் உன் வால் பிடிக்க, பதுங்கி பதுங்கி வரும்வேளையிலே                                      “காச்சிட்டான் கள்ளச்சிட்டான்
                                              கள்ளன் வாரான் ஓடிப்போ,,,,ஓடிப்போ...” என பாடி உனை விரட்டிவிடும்
                     பால்ய நண்பனை ஜென்மவிரோதியாய் பார்த்த   அந்தநாட்களில்.......

அந்தநாட்களில்.......எங்களது பொழுதுகளை மகிழ்ச்சிகரமாய் ஆக்கிய நீங்கள் எங்களது சந்ததிகளை மகிழ்விக்க வரமாட்டீர்கள் என சத்தியமாய் எங்களுக்கு தெரியாது அந்தநாட்களில்.......

அந்தநாட்களில்.......உங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம் நாங்கள்,,,, ஆகையால் வந்தீர்கள் நீங்கள்.
இன்று வரவேற்க யாருமில்லை ......அதனால் நீங்கள் வரவுமில்லை....


ஓ.......

பாசி,கள்ளன்,தோட்டான்,கரிமிலகாய்,குதிரை,மணிலாச்சிட்டான்,மாழ்பழச்சிட்டு,
மயில்வால் தும்பிகளே .......நீங்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டீர்கள்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடாதீர்கள்....

புத்தகப்புழுக்களாய் மாறிவிட்ட குழந்தைகளின் குழந்தை உள்ளத்தை
மீட்டெடுக்க எனதருமை தும்பிகளே ....வாருங்கள் ....வாருங்கள்...

காத்திருக்கும் தம்பிகளுக்காக   வாருங்கள்  தும்பிகளே வாருங்கள்........




Thursday 15 September 2011

மற்றொரு மழைக்காலத்தில்....!!!!!!!!........??????

நேற்றுக்கு முந்திய நாட்கள்..........                                                  அத்தியாயம்-1

           மாலைமயங்கும் வேளையிலே  சாலையில் நடக்கையில் சில்லென்று வந்த சுழல்காற்று உடல் தடவி, மனம் வருடி செல்கையில் சுழன்றெழும்பி
பறந்தன சாலையோர தூசுகள் கூடவே என் மனமும்.

                                      தூறல்கள் விழுந்தன.

         மண்ணில் விழுந்த மழைத்துளிகள்   மண்ணின்                   நுண்ணுயிர்களை உயிர்பித்தது.

          என்னில் விழுந்த மண்வாசனை ஆழ்மனதின்
எண்ணங்களை   உயிர்பித்தது.
  
      இடி, என் மனக்குதிரையை வெகுண்டெழுந்து ஓடச்செய்தது
மின்னல், அதற்கு வெளிச்சம் காட்டியது,விரைந்தது......குதிரை.

        செட்டியார் கடையில் இனிப்பு போண்டா தின்று, சுக்கு காபி
குடித்துக் கொண்டு மனக்குதிரையில் எண்ணங்கள் பின்நோக்கி
பயணம் செய்தது.
  
        சாலையில் மழை நின்ற பொழுதும் என் மனச் சோலையில்
தூறல்கள் தொடர்ந்தன.......................................................................................


                                                                                                                       தூறல்கள் தொடரும்



(  இந்த தொடர்,  அவரவர் மனதின் பால்ய கால நுட்மான நினைவுகளை எனது நினைவு என்னும் மயிலிறாகால் வருடி நினைவு பெறச்செய்யும்
சிறு முயற்சி. )
           

Tuesday 13 September 2011

முதல் பயணம்

என்னுடைய வீட்டைப் பொறுத்தவரை அதற்கு சுவர்களோ,மேற்கூரையோ
கிடையாது!!!!!!!    நான் கேட்கிறேன்,
 நம்மில் யார் கைதியாய் இருக்கவிரும்புகிறோம்!!!!!!